ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி மீது தாக்குதல் - தலைமறைவான நபரை தேடும் போலீசார்
பந்தலுார்; கோவை மண்டல ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளராக இருப்பவர் தியாகராஜன்,44. இவர். பந்தலுாரில் வசித்து வருகிறார். இங்கு கடை நடத்தி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பரமேஸ்வரி என்பவர் தனியாார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தி வருகிறார். கடந்த, 4-ம் தேதி கடை ஊழியர் வெளியில் சென்றிருந்த நிலையில், கடன் வசூலிக்க வரும் நபர் கடனை திரும்ப செலுத்த கோரி, கடைக்கு நான்கு முறை வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த தியாகராஜன், 'வங்கி கணக்கு எண்ணை தந்துவிட்டு செல்லுங்கள்; அவர் வந்தவுடன் வங்கி கணக்கில் தொகையை செலுத்த கூறுகிறேன்,' என தெரிவித்துள்ளார்.அதனை ஏற்க மறுத்த கடன் வசூலிக்க வந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், கடையை விட்டு வெளியே செல்லுமாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார். அப்போது, தியாகராஜன் மற்றும் அவரது மகனை கடன் வசூலிக்கு வந்த நபர் கடுமையாக தாக்கிய நிலையில், காயமடைந்த தியாகராஜன் பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் தேவாலா போலீசார், தனியார் நிதி நிறுவன பணியாளர், அருண் என்பவர் மீது, மூன்று -பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.