முருகன் கோவிலுக்குள் கரடி: பூஜை பொருட்கள் சேதம்
கோத்தகிரி; கோத்தகிரி கல்லாடா முருகன் கோவிலுக்குள் புகுந்த கரடி, பூஜை பொருட்களை சேதப்படுத்தி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி அரவேனு கல்லாடா பகுதியில், கரடி, சிறுத்தை மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவில் கதவுகளை உடைத்து கரடி உள்ளே புகுந்துள்ளது.விளக்கு ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் பழங்களை உட்கொண்டு, பிற பூஜை பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலை, கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக, குடியிருப்புகள் நிறைந்த கோவில் பகுதியில் உலா வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.