பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்கள் பங்கேற்பு
கூடலுார்: முதுமலை, மசினகுடி பகுதிகளில் நடந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள், 240 பேர் பங்கேற்றனர். கூடலுார் மற்றும் மசினகுடி வனக்கோட்டங்கள், முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், நீர்வாழ் உயிரினங்கள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கி, 11:00 மணி வரை நடந்தது. இப்பணியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 25 இடங்களில் 100 பேர், கூடலுார் வனக்கோட்டத்தில், 21 இடங்களில் 126 பேர், மசினகுடி, 3 இடங்களில் 15 பேர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள், குறிப்பிட்ட நீர்நிலைகளில் காத்திருந்து பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். பணியின் போது, பறவை இனங்கள் குறித்த விவரங்கள், இருப்பிடம் குறித்த விபரங்களை பதிவு செய்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்படும் பறவை இனங்களின் அடிப்படையில் நீர்வாழ் பறவைகள் இனங்கள் குறித்த எண்ணிக்கை தெரிய வரும்,' என்றனர்.