மகாவிஷ்ணு கோவிலில் புத்தரி பூஜை கோலாகலம்
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி மகாவிஷ்ணு கோவிலில், புத்தரி பூஜை சிறப்பாக நடந்தது. பந்தலூர் பகுதியில் வாழ்ந்து வரும், பழங்குடியின மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள், 'பூ புத்தரி' விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். துலாம் மாதம் 1-ம் தேதி முதல் 10நாட்கள், பழங்குடியின மக்கள் விரதமிருந்து, அதில் ஒருவரை தேர்வு செய்து கோவிலில் தங்க வைத்து இந்த புத்தரி விழாவில் பங்கேற்கின்றனர். பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் நிர்வாகம், பழங்குடியின மக்கள் இணைந்து, நடத்திய இந்த விழாவில் அறுவடைக்கு கோவிலில் விரதமிருந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கு, பூஜை செய்யப்பட்ட வேஷ்டி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பழங்குடியினர் நிர்வாகி வாசு, செங்குட்டுவன் பழங்குடியின மக்கள் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் கேரளா மாநிலம் வயநாடு செட்டி ஆலத்துார் என்ற இடத்தில், வயலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முதிர்ந்த கதிர்கள் எடுக்கப்பட்டது. அவற்றை தலைசுமையாக கொண்டுவந்து, விஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அருகிலுள்ள கோவில்களுக்கு கதிர், அரச இலை வழங்கப்பட்டதுடன் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.