லாரி பார்க்கிங் தளமாக மாறிய பஸ் ஸ்டாண்ட்
பந்தலுார்; பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பகுதி, லாரி பார்க்கிங் தளமாக மாறி வருவதால், பஸ் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. பந்தலுாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பஸ் ஏறுவதற்கு போதிய வசதிகள் இல்லாமல் உள்ளதால், பஸ்களில் மழையில் நனைந்தபடி ஏறுவது மற்றும் உட்கார இடம் இல்லாமல் நின்றபடியே காத்திருப்பது போன்ற செயலால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் உட்பகுதியில், தனியார் வாகனங்கள் மற்றும் லாரிகளை 'பார்க்கிங்' செய்யும் இடமாக மாற்றி வருவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் வரும்போது, நிறுத்த இடம் இல்லாமல் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், இங்கு விதிமீறல் நடப்பது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.