செவிலியர் பயிற்சி முடித்த பழங்குடி பெண்களுக்கு சான்றிதழ்
கோத்தகிரி: கோத்தகிரியில் செவிலியர் பயிற்சி முடித்த, பழங்குடியின பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பழங்குடியினர் நலத்துறை, பிளஸ் 2 வகுப்பு முடித்து, வேலை இல்லாமல் உள்ள பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒரு வருட கால செவிலியர் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை, 2024 அக். மாதம் அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுடர் அமைப்பு, பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து, கடந்த ஆண்டு அக்., மாதம் சத்தியமங்கலத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தியது. அந்த முகாமின் தேர்வு செய்யப்பட்ட, 18 பேர் உட்பட, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை கிறிஸ்தவ கல்லுாரியின் ஒரு பிரிவான கோத்தகிரி சமுதாயக் கல்லுாரியில், ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டது. உணவு, தங்கும் வசதி, பயிற்சி உள்ளிட்ட செலவினங்கள் பழங்குடியினர் நலத்துறை செய்திருந்தது. பயிற்சி நிறைவு செய்த செவிலியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோத்தகிரியில் நடந்தது. பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை சான்றிதழ் மற்றும் பணி நியமன ஆணை வழங்கி பேசினார். இதில், சென்னை கிறிஸ்தவ கல்லுாரி முதல்வர் வில்சன், சுடர் அமைப்பின் இயக்குனர் நடராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பீட்டர், சமுதாய கல்லுாரி கன்வீனர் பெலின்டா , ஒருங்கிணைப்பாளர் லெனின் உட்பட செவிலியர்கள் பங்கேற்றனர்.