நெல்லியாளம் நகராட்சியில் தொடரும் பனிப்போர்; மக்களுக்கான அரசின் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சியில் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடரும் பனிப்போரால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இங்கு பழங்குடியினரான சிவகாமி தலைவராக உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல், சில ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் சில கவுன்சிலர்கள், இவர் பழங்குடியின பெண் என்பதால், இவரின் உத்தரவுகளை மதிக்காமல், 'ஓரம் கட்டுவதில்' குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், 'பழங்குடியின தலைவரை மாற்றம் செய்ய வேண்டும்,' என, சில கவுன்சிலர்கள் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர், கட்சி தலைமை அலுவலகம் வரை புகார் கொண்டு சென்றனர். ஆனால், நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம், ஒப்பந்ததாரர்கள் மூலம் சிக்க வைத்தனர். தலைவர் அலுவலக மேஜை மீது பணத்தை வைத்து சென்ற நிலையில் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக் முன்னிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் நகரமன்ற -தலைவர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில், 'அனைவரும் இணக்கமாக செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, நடந்த நகராட்சி மன்ற கூட்டத்தில், '4- தி.மு.க., கவுன்சிலர்கள்; மா.கம்யூ., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்,' என, 6- பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால், தலைவருக்கான ஆதரவு கரம் குறைந்து வருகிறது. மறுபுறம், கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரால், மக்களுக்கான வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'மாநிலத்தின் முதல் பழங்குடியின பெண் தலைவர் உள்ள நெல்லியாளம் நகராட்சியில், தொடரும் பிரச்னைக்கு தீர்வு காண மாநில அரசு; மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.