மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு பதில் பள்ளம் வெட்டிய ஒப்பந்ததாரர்
பந்தலூர்: பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு, கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி 3 ஆண்டுகள் கடந்தும், பணி துவக்காதது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. பந்தலூரில் தாலுக்கா அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவமனைக்கு போதிய கட்டட வசதிகள் இருந்தும், நோயாளிகள் பயன்படுத்த உபகரணங்கள் இல்லாததால், கட்டடங்கள் வீணாகி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்ட, சுகாதாரத்துறை மூலம் 5 கோடி ரூபாயும், உபகரணங்கள் வாங்க 75 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டடம் கட்டுவதற்கான நிதியை நெல்லியாலம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்ட நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பணி துவக்கப்பட்டது. புதிய கட்டுமான பணி தொடங்குவதற்காக, இந்த பகுதியில் நல்ல நிலையில் இருந்த குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், நீதிமன்றம் செல்லும் சாலையை ஒட்டி, பெரிய அளவிலான பள்ளம் ஒன்றை வெட்டி வைத்துள்ளார். இதில் தண்ணீர் தேங்கி நின்று, நகராட்சி கட்டடம் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. அத்துடன் நகராட்சி தடுப்பு சுவரும் இடிந்து விழுந்ததுடன், நீதிமன்றம் மற்றும் அரசு துவக்கப் பள்ளிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தவறி விழுந்தால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் நிலை ஏற்பட்டது. நகராட்சி அலுவலகம் எதிரில், கட்டுமான பணி கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதுடன், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிய பள்ளம் தோண்டி வைத்திருப்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் கட்டிடம் கட்டுமான பணி துவக்காமலே நிதி திரும்பிச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வருக்கு, இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அனுப்பியும், தீர்வு காணப்படவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, பணியை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரரிடம் இருந்து டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர் விட்டு கட்டுமான பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளிகள் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.