ஐயப்ப பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்
கூடலுார்; கூடலுார் வழியாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக, முனீஸ்வரன் கோவிலில் அன்னதானம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சென்று வருகின்றனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள், கூடலுார் வழியாக, குருவாயூர் சென்று, சபரிமலைக்கு செல்கின்றனர்.இந்நிலையில், உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் கூடலுார் வழியாக பயணிக்கும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் மைசூரு சாலையில் உள்ள, சக்தி முனீஸ்வரர் கோவிலில் அன்னதானம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நீண்ட துாரம் பயணித்து வரும் வெளி மாநில ஐயப்ப பக்தர்களுக்கு இந்த அன்னதான திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. திட்டத்தின் நிர்வாகிகள் கூறுகையில், 'உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், அன்னதான திட்டத்தை செயல்படுத்திவருகிறோம். இத்திட்டம் மண்டல பூஜை வரை நடக்கும்,' என்றனர்.