மேலும் செய்திகள்
சேதமடைந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி
18-Mar-2025
கூடலுார்; தமிழக - கேரளா எல்லையை ஒட்டி, சேதமடைந்துள்ள சாலையில், தற்காலிக சீரமைப்பு பணியும் முழுமையாக மேற்கொள்ளாததால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் கோழிக்கோடு சாலை, நாடுகாணியில் இருந்து கேரளாவுக்கு சாலை பிரிந்து செல்கிறது. நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அதில், வாகனங்கள் இயக்க சுற்றுலா பயணிகள், டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.சேதமடைந்த சாலையில், வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், இச்சாலையில், முதல் கட்டமாக சேதமடைந்த, 4 இடங்களில் மட்டும், சில வாரங்களுக்கு முன் 'இன்டர்லாக்' கற்கள் பதித்து சீரமைத்தனர். சேதமடைந்த மற்ற பகுதிகளை சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியை கடந்து செல்ல டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.டிரைவர்கள் கூறுகையில், 'சாலை கடந்த சில ஆண்டுகளாக பல இடங்களில் சேதமடைந்து வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகிறோம். முதல் கட்டமாக சேதமடைந்த பகுதிகளில், நான்கு இடங்கள் மட்டும் சீரமைத்துள்ளனர்.மற்ற பகுதிகள் சீரமைக்க வில்லை. இதனால், சாலையில் வாகனங்கள் இயக்க தொடர்ந்து சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த அனைத்து பகுதிகளையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
18-Mar-2025