எமரால்டு அணை தண்ணீர் திறப்பு; ஒரு மாதம் நிறைவு
ஊட்டி: ஊட்டி அருகே காட்டு குப்பையில் குந்தா நீரேற்று மின் திட்ட பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், குறிப்பிட்ட இரு அணைகளில் தண்ணீர் வெளியேற்றினால் தான் அடுத்த கட்டப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து, 150 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டது. நீர் வெளி யேற்றும் பணி கடந்த மாதம், 13ம் தேதி துவங்கி, வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒரு மாத நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இது வரை, 70 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும், 80 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட வேண்டியிருப்பதால், இரு அணைகளிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. எமரால்டு அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் நீரோடை வழியாக குந்தா அணையில் சேகரமாகிறது. அங்கிருந்து இரு மதகுகள் வழியாக, 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் தண்ணீரால் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்தில், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைத்து, கோவை மக்களுக்கு தடையின்றி குடிநீரை வினியோகிக்கலாம்.