வசீகரிக்கும் செங்காந்தள் மலர்கள்; ரசித்து செல்லும் பயணிகள்
பந்தலுார் : பந்தலுார் பகுதியில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.சங்க இலக்கிய பாடல்களில் முக்கியத்துவம் பெற்ற செங்காந்தள் மலர், நம் மாநில மலராக உள்ளது. 'கார்த்திகை பூ; கண்வலி கிழங்கு' ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. 'குளோரிசா சூப்பர்பா' எனும் தாவரவியல் பெயரை கொண்ட செங்காந்தள் மலர்கள் தற்போது, மாவட்டத்தின் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் அதிக அளவில் பூத்து காணப்படுகிறது.இதன் கிழங்கு பல்வேறு மருத்துவ குணம் கொண்டதால், சமவெளிப் பகுதிகளில் பலரும் இதனை வர்த்தக ரீதியாகவும் உற்பத்தி செய்து வருகின்றனர். பந்தலுார் நெல்லியாளம் சாலை ஓரங்களில் அதிகரித்து காணப்படும் இந்த மலர்களை, நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.