| ADDED : பிப் 15, 2024 09:12 PM
கூடலுார்:கூடலுார் பகுதியில் செல்ல, 'கூகுள் மேப்' இரண்டாம் முறையாக தவறான வழிகாட்டியதால், கேரளா சுற்றுலா பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக, வந்த சுற்றுலா பயணியர், மாற்று வழியில் செல்ல, 'கூகுள் மேப்' பயன்படுத்தி காரை ஓட்டினர்.அப்போது, இணைப்பு சாலை வழியாக சென்ற, கார் சிமென்ட் சாலை படியில் சிக்கியது. போலீசார்; மக்கள் வந்து உதவியதால், நான்கு பேர் உயிர் தப்பினர்.இதேபோல் நேற்று முன்தினம் கேரளாவை சுற்றுலா பயணியர், ஊட்டி செல்வதற்கு கூடலுார் வந்தனர். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் மாற்று வழியில் செல்ல 'கூகுள் மேப்' பயன்படுத்தி உள்ளனர்.அதன் வழிகாட்டுதல்படி, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அக்ரகாரம் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் சென்றனர். 500 மீட்டர் சென்ற பின் சாலை முடிவடைந்தது.அதற்கு மேல் கார் செல்ல முடியாமலும், காரை திருப்ப முடியாமலும் பெரும் சிரமத்திற்கு கார் பயணியர் ஆளாகினர். தொடர்ந்து, ஒரு மணிநேரம் போராட்டத்துக்கு பின், அப்பகுதி மக்கள் உதவியுடன் காரை மீண்டும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பி வந்தனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'நீலகிரியில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்ல 'கூகுள் மேப்' தவறான வழி காட்டி வருகிறது. சுற்றுலா பயணியர் திணறி வருகின்றனர். அதில், உள்ள பிரச்னையை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.