இரண்டு அறைகளுடன் செயல்படும் அரசு பள்ளி: ஒரே அறையில் அலுவலகம் மற்றும் வகுப்பறை
கூடலூர்: கூடலூர், கீழ்நாடுகாணியில் 7 சென்ட் இடத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, இரண்டு கட்டடங்களில் 4 அறைகளுடன் செயல்பட்டு வந்தது. அதில் ஒன்று அலுவலகமாகவும், மற்றவை வகுப்பறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் இருந்த ஒரு கட்டடம் 2021ல் இடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக இதுவரை புதிய கட்டடம் கட்டி தரப்படவில்லை. இதனால், 40 மாணவர்களுடன் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது இங்குள்ள இரண்டு அறைகள் கொண்ட கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள அறை ஒன்று முதல் 3ம் வகுப்பறையாகவும், முதல் தளத்தில் உள்ள ஒரு அறையை அலுவலகம் மற்றும் 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறையாகவும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி உள்ளது. தற்போது, அந்த கட்டடமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. பள்ளிக்குத் தேவையான புதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகளை கட்டித் தர வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், 'இப்பள்ளிக்கு 17 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் தற்போது, 7 சென்ட் நிலத்தில் மட்டும் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த இரண்டு கட்டடத்தில், ஒரு கட்டடம் இடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. மாற்றாக புதிய கட்டடம் கட்டித் தரப்படவில்லை. மாணவர்கள் வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் வசதி இன்றி, சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, போதிய வகுப்பறைகள் கட்டி தர வேண்டும்' என்றனர்.