குண்டம்புழா பசுமை மலைகள்: சுற்றுலா பயணிகள் வியப்பு
கூடலுார்; கூடலுாரில் பருவ மழையை தொடர்ந்து, பசுமைக்கு மாறியுள்ள ஓவேலி குண்டம்புழா மலைகள், நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு பருவமழை முன்னதாக துவங்கி பெய்து வருகிறது. பருவமழை தொடர்ந்து வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது.நீர் நிலைகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கியுள்ளது. மேலும், பசுமையான, காடுகள், மலைகள், இவ்வழியாக பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.அதில், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதியில் உள்ள பசுமை மலைகளும், மலையை சுற்றி செல்லும் பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டிய காடுகள், அதனை ஒட்டிய ஓவேலி வனங்களில் உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'நாடுகாணி அதனை ஒட்டிய குண்டம்புழா மற்றும் ஓவேலி பசுமை வனம், மலைகள், நீர்வீழ்ச்சிகள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்கள் குளிர்ச்சியாகவும் உள்ளது. இயற்கையை நேசிப்பவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்' என்றனர்.