கிராம சபை கூட்டத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு
பந்தலுார்:கிராமசபை கூட்டத்தில், ஆதார், ரேஷன் அட்டையை கிராம மக்கள் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட, கப்பாலா பகுதியில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் வாழ்வாதார இயக்க நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், 'சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் மனித - விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வனத்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்' என, தெரிவித்தனர். தொடர்ந்து, கருத்தாடு கிராம பழங்குடியின மக்கள் மற்றும் இதர சமுதாய மக்கள், '50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. வனத்துறை தீர்வு காணவில்லை' என தெரிவித்தனர். இந்த இரு குழுவினரும், ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, வங்கிபுத்தகம் ஆகியவற்றை கிராம சபையில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆவணங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.