மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்கும் இல்லம்: எமரால்டு அரசு மருத்துவமனையில் திறப்பு
ஊட்டி: நீலகிரியில் முதன் முறையாக, எமரால்டு அரசு மருத்துவமனையில், 20 படுக்கைகள் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி அருகே எமரால்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ெஹல்பிங் ஹட்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லம் ஏற்படுத்தினர். இந்த இல்லத்தில், ஆண்கள், 10, பெண்கள், 10 என, 20 படுக்கைகள் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தங்கும் இல்லம் ஏற்படுத்தினர். இந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை, தொழில் முறை சிகிச்சை, பொழுது போக்கு சிகிச்சை, மருந்து மற்றும் உணவு வசதிகளுடன் முழு மறு வாழ்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இல்லத்தை, நீலகிரி தொகுதி எம்.பி.ராஜா, தமிழக அரசு கொறடா ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். கலெக்டர் லட்சுமி பவ்யா, தேசிய சுகாதார இயக்க இயக்குனர் அருண்தம்புராஜ், சுகாதார துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.