உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடுதல் லாபம் தருவதாக மோசடி; ரூ.7 லட்சம் ஏமாந்த ஐ.டி., ஊழியர்

கூடுதல் லாபம் தருவதாக மோசடி; ரூ.7 லட்சம் ஏமாந்த ஐ.டி., ஊழியர்

ஊட்டி; பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் தருவதாக கூறி ஐ.டி., ஊழியரிடம், 7 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் பகுதியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் என்ஜினியரிங் முடித்துவிட்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் பங்கு சந்தையில் குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தார். அவருடைய ஆன்லைன் கணக்கில் முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் பணம் இருப்பதாக காட்டப்பட்டது. இதை நம்பிய அவர், 7 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஒரு கட்டத்தில் பணம் தேவைப்பட்டதால் திருப்பி எடுக்க முயற்சி செய்தார். அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. பங்குச்சந்தை மோசடி குறித்து பேசிய மர்ம நபர்களையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் இதுகுறித்து ஆன்லைன் வாயிலாக 'சைபர் கிரைம்' வலைதளத்தில் புகார் அளித்தார். ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி