உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செல்ல பிராணிகள் வளர்ப்போருக்கு உரிமம் அவசியம்; 30ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுரை

செல்ல பிராணிகள் வளர்ப்போருக்கு உரிமம் அவசியம்; 30ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுரை

ஊட்டி; 'செல்லப்பிராணிகள் வளர்ப்போர், நாய் இனப்பெருக்கம் மேற்கொள்வோர், செல்லப்பிராணிகள் விற்பனை செய்வோர், 30ம் தேதிக்குள் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விலங்குகள் வதை தடுப்பு சங்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதற்கு தனியாக இடம் மற்றும் உணவு அளிக்கும் நபர்கள் கண்டறியப்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள நகராட்சி மற்றும் உள்ளாட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்களை கொண்டு கூட்டம் நடத்தி, அவர்களது பகுதிகளில் நாய்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்களை கண்டறிய ஊடகங்களில் விளம்பர செய்ய வேண்டும். கண்டறியப்படும் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்களுக்கு கடிதம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு இந்த விவரம் சேகரிக்க வேண்டும். மையம் துவக்கப்பட வேண்டும் குன்னுார், கோத்தகிரி மற்றும் கூடலுாரில் அடுத்த, 10 நாட்களில் ஏ.பி.சி., மையம் துவக்கப்பட வேண்டும். தெரு நாய்களை பிடிக்கும் பணிகளை நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக மேற்கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக ஏ.பி.சி., மையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அறுவை சிகிச்சை பின் பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நீலகிரியில் உள்ள அனைத்து செல்ல பிராணி கள் வளர்ப்போர், நாய் இனப் பெருக்கம் மேற்கொள்வோர், செல்லப்பிராணிகள் விற்பனை செய்வோர் மற்றும் செல்லப்பிராணிகள் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அலுவலகத்தில், 30ம் தேதிக்குள் பதிவு செய்து அதனை, டி.என்.ஏ.டபிள்யூ.பி., தளத்தில் பதிவேற்றி உரிமம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கேனல் கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை