உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காணாமல் போன போர்வெல் கிணறு; குடிநீர் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

காணாமல் போன போர்வெல் கிணறு; குடிநீர் கிடைக்காமல் திண்டாடும் மக்கள்

பந்தலுார்; பந்தலுார் சேரங்கோடு பகுதியில் போர்வெல் அகற்றப்பட்டது குறித்து சேரம்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, போலீஸ் நிலையம் அருகே பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். தொடர்ந்து, 2003--04ம் நிதி ஆண்டில் சேரங்கோடு ஊராட்சி மூலம், போலீஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில் போர்வெல் கிணறு அமைத்து, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இதற்காக தனியாக மின் மீட்டர் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது.தொடர்ந்து, அதிகாரிகளின் அலட்சியத்தால், குடிநீர் வினியோகம் தடைபட்டு வந்த நிலையில் தற்போது, அந்த பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அனுமதி பெறாமல் மூடல்

பெட்ரோல் பங்க் அமைக்கும் பகுதியில் போர்வெல் கிணறு அமைக்கப்பட்டு இருந்த நிலையில், எந்தவிதமான அனுமதியும் இன்றி போர்வெல் கிணறு முழுமையாக மூடப்பட்டு, அந்தப் பகுதியில் தனியார் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் மீட்டர் பொருத்தப்பட்ட இடம் மட்டும் புதர் மண்டி கிடக்கிறது. இந்நிலையில், அரசு மூலம் அமைக்கப்பட்ட போர்வெல் கிணறை, அப்புறப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உரிய விசாரணை மேற்கொள்ளவும் வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம் கூறுகையில்,''போர்வெல் அகற்றப்பட்டது குறித்து சேரம்பாடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.போலீசாரின் விசாரணை அறிக்கை வந்த பின்னரே இது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை