மந்த கதியில் நவீன கழிப்பிட பணி; சீசன் துவங்கியும் ஆமை வேகம்
ஊட்டி ; ஊட்டி நகரில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பிட கட்டுமான பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின், 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், சர்வதேச சுற்றுலா நகரமாக உள்ள ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு, 'ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், கேசினோ சந்திப்பு, பிங்கர் போஸ்ட், பஸ் ஸ்டாண்ட், தாவரவியல் பூங்கா சாலை,' என , 10 இடங்களில் நவீன கழிப்பிடம் கட்ட நட வடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, ஒரு கழிப்பிடத்திற்கு தலா, 20 லட்சம் ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் துவக்கப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி வேறு வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் சில மாதங்களாக மந்த கதியில் நடந்து வருகிறது. மக்கள் கூறுகையில், 'தற்போது, ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் நலன் கருதி ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தி நவீன கழிப்பிடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.