மலையேற்றம் மறக்க முடியாத அனுபவம் ; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கருத்து
கூடலுார்; 'கூடலுார் கரியன்சோலை ஊசிமலை வழித்தடத்தில் மலையேற்றம் மறக்கமுடியாத அனுபவத்தை தந்தது,' என, சுற்றுலா பயணிகள் கூறினார்.நம் மாநிலத்தில், 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, 'தமிழக மலையேறும் திட்டம்,' அக்., மாதம் துவங்கப்பட்டது. மலையேறும் வழித்தடங்கள் தொடர்பாக 'டிஜிட்டல்' வரைபடங்கள் தயாரித்து வெளியிடப்பட்டது. அதில், நீலகிரி மாவட்டத்தில், கூடலுார் வனக்கோட்டத்தில் உள்ள, ஜீன்பூல் தாவர மையம், ஊசிமலை (கரியன்சோலை) உள்ளிட்ட, 10 மலையேற்ற வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இணையதளத்தில் முன்பதிவு
இங்குள்ள வழித்தடங்களில் மலையேற்றத்திற்கு செல்ல, இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, வனத்துறையின் வழிகாட்டுதலுடன் சென்று வர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.அதில், ஜீன்பூல் தாவரமையம், மலையேற்ற வழித்தடத்தை தொடர்ந்து, ஊசிமலை மலையேற்றம் வழிதடத்தில், சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்றுவர துவங்கி உள்ளனர்.இந்த வழித்தடத்தில், முதல் மலையேற்றம் மேற்கொண்ட, இரண்டு வெளிநாட்டு பயணிகள் உட்பட ஐந்து பேருக்கு, வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர்கள் வீரமணி குமரன் மற்றும் வன ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து மலையேற்ற சுற்றுலாவை துவக்கி வைத்தனர். பயணத்தில் புதிய அனுபவம்
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இப்பகுதியில் மலையற்றம் மேற்கொண்டது புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையிலிருந்து இங்குள்ள வனப்பகுதிகளை முழுமையாக ரசிக்க முடிகிறது.மலைகளில் நடந்து செல்வதும், இங்கு நிலவும் காலநிலையும் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் உள்ள இரண்டு மலையேற்ற வழித்தடங்களில், வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வருகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மலையேற்றம் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து வர வேண்டும்,' என்றனர்.