அரசு பஸ் மீது விழுந்த மின் கம்பம் அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
ஊட்டி: ஊட்டி அருகே அரசு பஸ் மீது மின்கம்பம் விழுந்த சம்பவத்தில், 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஊட்டி பெந்தட்டி இடையே அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் அதிக கிராமங்கள் உள்ளதால், பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று பகல் பெந்தட்டியில் இருந்து, 40 பயணிகளுடன், ஊட்டிக்கு பஸ் சென்றது. டிரைவர் ஜெயபிரகாஷ் பஸ்சை இயக்க, கண்டக்டர் ரவிக்குமார் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டு இருந்தார். ஊட்டி பாரஸ்ட் கேட் அருகே, எதிரில் லாரி வந்ததால், பஸ் ஒதுங்கி நின்ற நிலையில், லாரி சாலையில் இருந்து சற்று இறங்கிய போது, அதில், உரசி நின்ற மின்கம்பம் பஸ்சின் மேல் விழுந்தது. பஸ்சின் மேற்கூரை ஓட்டை ஏற்பட்டு, மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அச்சம் அடைந்த பயணிகள் அவசரமாக கீழே இறங்கி உயிர் தப்பினர். மின்துறை அலுவலர்கள் மின் ஒயரை மாற்றி அமைத்து பஸ்சை மீட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் மாற்று வாகங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.