பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
கூடலுார்; கூடலுார் ஓவேலி சாலையில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். கூடலுாரில் இருந்து ஓவேலி ஆரூட்டுப்பாறைக்கு இயக்கப்படும் அரசு பஸ் அடிக்கடி பழுதாகி இடையில், நிற்பதாக பயணிகள் புகார் கூறி வந்தனர். இதனை மாற்ற நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் ஆரூட்டுபாறையிலிருந்து, கூடலுார் புறப்பட்ட அரசு பஸ், முல்லை நகர் அருகே, பழுதாகி சாலையோரம் நின்றது. பயணிகள் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின், அவ்வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏற்றி சிலரை அனுப்பி வைத்தனர். மீதமிருந்த பலர், தனியார் வாகனத்தில் கூடலுார் வந்து சேர்ந்தனர். பயணிகள் கூறுகையில், 'கூடலுார் ஆருட்டுப்பறை இடையே இயக்கப்படும் பழைய பஸ், அடிக்கடி பழுதாகி, நிற்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாத இப்பகுதிக்கு, புதிய பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.