சாலையோரம் மீண்டும் கடை வைக்க முயற்சி: தடுத்த போலீசார்
கூடலுார்; கூடலுாரில் மீண்டும் சாலையோரத்தில், கடை வைக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.கூடலுாரில் இரு வாரம் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. வாகனங்களை நிறுத்த 'ஆவின்' வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனிடையே, சாலையோர வியாபாரிகள், 'தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால். மீண்டும் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்,' வலியுறுத்தி வந்தனர். 'சாலையோர வியாபாரிகள், கடைகள் வைக்க தனி இடும் ஒதுக்கீடு செய்யப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், சாலையோர வியாபாரிகள் சிலர் மீண்டும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கடை அமைத்தனர். இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.அங்கு வந்த, கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கூறுகையில், ''சாலையோர வியாபாரிகளுக்கு கடை வைக்க இடம் ஒதுக்குவது தொடர்பாக நகராட்சி முடிவு செய்யும். எனவே, இப்பகுதியில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதி இல்லை. உடனடியாக கடைகள் அகற்ற வேண்டும். இல்லையெனில் கடைகள் அகற்றப்படும்,'' என்றனர். தொடர்ந்து, சாலையோரம் வியாபாரிகள் கடைகள் காலி செய்து சென்றனர்.