முன்னெச்சரிக்கை நடவடிக்கை; கால்வாய் சீரமைப்பு துரிதம்
குன்னுார் : குன்னுார் நகராட்சியில், மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய் சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் மழைநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, தடம் மாறி செல்லும் மழை நீரால், மண்சரிவு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், மழைநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.இதன் பேரில், குன்னுார் நகராட்சியில் உள்ள, 30 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்துவதுடன், சாலையோரங்களில் மழைநீர் செல்ல சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வார்டுகள் தோறும் துாய்மை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.