உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தென்மாநில தேயிலை துாள் உற்பத்தியில் எழுச்சி; விலை உயர்வு தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மாநில தேயிலை துாள் உற்பத்தியில் எழுச்சி; விலை உயர்வு தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

குன்னுார் : வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டதால், தென் மாநில தேயிலை துாளுக்கு கிராக்கி அதிகரித்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தேயிலை துாள் மற்றும் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென் மாநில தேயிலை தொழில் ஏற்றத்தை கண்டு வருகிறது. அதில், தேயிலை துாள் கிலோவுக்கு சராசரி விலையாக, 85 ரூபாய்க்கும் குறைவாக இருந்த 'டீசர்வ்' ஏலம் கூட ஏற்றம் கண்டு, கிலோ, 148 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. குன்னுார் ஏலத்தில் சராசரி விலையாக, 161 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது வரை இல்லாத அளவு கடந்த இரு வாரங்களில், 32.69 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்துள்ளது வர்த்தகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசுந்தேயிலைக்கான விலையும் கிலோவுக்கு, 23.43 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகளும் ஆறுதல் அடைந்துள்ளனர்.

தென்மாநில துாளுக்கு கிராக்கி

தேயிலை துாள் வர்த்தகர்கள் கூறுகையில், 'மேற்கு வங்க தேயிலை தோட்ட நிறுவனங்களின் உற்பத்தியில், 21 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது; அசாமில் கடந்த ஆண்டின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, ஜூலை வரை, 11 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. பாதகமான காலநிலை, பூச்சி தாக்குதல் மற்றும் ஏற்றுமதி விலை வீழ்ச்சி காரணமாக குறிப்பிடத்தக்க பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 'அசாம் மற்றும் மேற்கு வங்கங்த்தில் உள்ள தேயிலை தொழில், 'நட்சத்திரமற்ற எதிர்காலத்தை' நோக்கி தள்ளப்பட்டுள்ளது,' என, இந்திய தேயிலை சங்கத்தின் (ஐ.டி.ஏ.,) கவலை தெரிவித்துள்ளது. கடந்த, ஆண்டை ஒப்பிடும்போது, 2024ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த உற்பத்தி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாநில உற்பத்தி பாதிப்பு காரணமாக, தென் மாநில தேயிலை துாளுக்கு கிராக்கி அதிகரித்து, இதுவரை இல்லாத ஏற்றம் கண்டு வருகிறது,' என்றனர். இந்த மாற்றத்தால் வர்த்தகர்களும், தென் மாநில தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நியாயமான நிரந்தர விலை அவசியம்!

நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறுகையில், ''வட மாநிலங்களில் உற்பத்தி குறையும் போது தென் மாநிலங்களில், குறிப்பாக நீலகிரியில் தேயிலைக்கு விலை உயர்வு ஏற்படுவதால் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது. விவசாயிகளுக்கான உற்பத்தி செலவு கிலோவிற்கு, 22.50 ரூபாய் ஆகும் நிலையில், எப்போதாவது கிடைக்கும் இந்த விலையால் பயனில்லை.மத்திய அரசின் தேயிலை வாரியம் மற்றும் தமிழக அரசின் 'இன்கோசர்வ்' ஆகியவை இதற்கு நிரந்தர தீர்வு காண, செயல் திட்டங்களை வகுத்து விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி