சாலையோர மண் அரிப்பு: விபத்து ஏற்படும் ஆபத்து
கூடலுார்: கூடலுார் - கோழிக்கோடு சாலையோரம் மண் அரிப்பால் சாலை சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கேரளா - தமிழகம்- கர்நாடகா வாகனங்கள் வந்து செல்லும் சந்திப்பு பகுதியாக கூடலுார் பகுதி உள்ளது. இங்குள்ள சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து, சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களால் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பெரும்பாலான சாலை ஓரங்களில், மழைநீர் செல்வதற்கான கால்வாய் வசதி இல்லை. மழைநீர் சாலைகளில் வழிந்தோடி சாலையோர மண் அரிப்பை ஏற்படுத்தி வருகிறது. கூடலுார், கோழிக்கோடு சாலை, இரும்புபாலம், கோழிப்பாலம் அருகே, சாலை ஓரங்களில் மழை நீரால் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருவதால், சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் கூறுகையில், 'சாலையோரங்களில் மழை நீர் கால்வாய் இல்லாததால், மழைநீர் சாலையில் வழிந்தோடி சாலையோரங்கள் மண் அரிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சாலைசேதமடைந்து, விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, சாலையோர மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.