| ADDED : பிப் 07, 2024 11:21 PM
சூலுார் : சூலுார் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்காளி நாற்றுகள் வழங்கப்படும், என, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், காய்கறிகள் பயிர் பரப்பு விரிவாக்கத்தை மேம்படுத்த, மானிய விலையில் தக்காளி நாற்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு கூறியதாவது:காய்கறிகள் பயிரிடும் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், தக்காளி நாற்றுகள் வழங்கப்படுகின்றன. ஒரு ஹெக்டேருக்கு, அதிகபட்சமாக, 12 ஆயிரத்து 500 நாற்றுகள் வழங்கப்படும். சிட்டா, அடங்கல் நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் மானியத்தை பெற, tnhorticulture.in.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்யவும். தகுதி உள்ள விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாற்றுகள் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம். 0422 - 2990014 என்ற எண்ணில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.