உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புலி தாக்கி ஆடுகள் பலி; வனத்துறையினர் ஆய்வு

புலி தாக்கி ஆடுகள் பலி; வனத்துறையினர் ஆய்வு

பந்தலுார்; பந்தலுார் அருகே பாலாவயல் பகுதியில் புலி தாக்கியதில் நான்கு ஆடுகள் ஆட்டு கொட்டகையில் பலியானது. பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலாவயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் புலி ஒன்று நடமாடி வந்ததை, அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவர் வளர்த்து வரும், நான்கு ஆடுகளை கொட்டகையில் புலி கடித்து குதறி உள்ளது. ஒரு ஆண் ஆடு காயம் அடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலன், வனச்சரகர் அய்யனார், வனவர்கள் சுதீர்குமார், ஆனந்த், வனக்காப்பாளர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சுனீல் என்பவர் கூறுகையில்,''இங்கு சில நாட்களாக புலி ஒன்று நடமாடி வருகிறது. இந்நிலையில், வளர்ப்பு ஆடுகளை வேட்டையாடிய, புலி மீண்டும் கிராமத்திற்கு வரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, வனத்துறையினர் கங்காதரனுக்கு,12 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி