குட்டிகளுடன் தண்ணீர் குடித்த புலி; வனப்பகுதியில் வியந்த சுற்றுலா பயணிகள்
கூடலுார்; பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், நான்கு குட்டிகளுடன் புலி தண்ணீர் குடித்து சென்ற காட்சி சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர், வாகனத்தில் சவாரி அழைத்து சென்று வருகின்றனர். தற்போது, இங்குள்ள வனப்பகுதியில், யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளுடன் புலியும் அடிக்கடி தென்படுவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன், வனத்தில் புலி தண்ணீர் குடித்த பின், அதன் நான்கு குட்டிகளுடன் விளையாடிய காட்சியை, சுற்றுலா பயணிகள் வியப்புடன் ரசித்தனர். சிலர், அதனை 'வீடியோ' பதிவு செய்து சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,'பந்திப்பூர், வனத்தில் அடிக்கடி புலி தென்படுவதை சுற்றுலா பயணிகள் உறுதி செய்துள்ளனர். வனத்துக்குள் அமைதியாக செல்வதன் மூலம், மற்ற விலங்குகள் போன்று புலிகளையும் பார்க்க முடியும்,' என்றனர்.