சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பந்தலுார்,; பந்தலுார் அருகே கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலையில், முக்கட்டி என்ற இடத்தில் காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று காலை நேரத்தில் சாலையின் குறுக்கே விழுந்தது. அதில், மின் கம்பிகள் அறுந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டதுடன், இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பிதர்காடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வாகனங்கள் செல்ல துவங்கியது.அப்பகுதி மக்கள் கூறுகையில்,' கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு மழை பெய்த நேரத்தில், இங்கு அபாய நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், காய்ந்த நிலையில் உள்ள மரங்களை வெட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த பணிகளை முழுமையாக மேற்கொள்ளாத காரணத்தால், காற்று வீசினாலே மரங்கள் விழுந்து வருகின்றன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதியில் அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.