கோடநாடு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு சாலையில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வடக்கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்து வரும் மழையால், ஆங்காங்கு மண் சரிவுடன், மரம் விழுந்து வருவது தொடர்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. காலை நிலவரப்படி, கீழ் கோத்த கிரியில், அதிகபட்சமாக, 84 மி.மீ., கோடநாட்டில், 60 மி.மீ., கோத்தகிரியில், 44 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையில், கோத்த கிரி-கோடநாடு சாலையில், வார்விக் பகுதியில் பெரிய மரம் சாலையில் விழுந்தது. இதனால் இவ்வழித்தடத்தில், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனுக்குடன் மரத்தை வெட்டி சாலையை சீரமைத்ததை அடுத்து, போக்குவரத்து சீரானது. மழையின் போது, பாண்டியன் நகரை சேர்ந்த விஜயலட்சுமி, கரக்கோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சாம கூடல் பகுதியை சேர்ந்த ரத்தினமணி, சத்திய நகரை சேர்ந்த ஜெயலட்சுமி, அருள்நகரை சேர்ந்த ராஜம்மாள் ஆகியோரது வீடுகளின் ஒரு பகுதி சேதம் அடைந்தன. பாதிக்கப் பட்டவர்களுக்கு வருவாய்த்துறையினர் தலா, 8,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கினர்.