உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் திருடிய வழக்கு: இரண்டு நக்சல்கள் கோர்ட்டில் ஆஜர்

வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் திருடிய வழக்கு: இரண்டு நக்சல்கள் கோர்ட்டில் ஆஜர்

ஊட்டி: அவலாஞ்சி வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை திருடிய வழக்கில், 2 நக்சல்கள் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊட்டி அடுத்த அவலாஞ்சி வனப்பகுதியில் கடந்த, 2017-ம் ஆண்டு வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமரா திருடப்பட்டிருந்தது. 3 கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து வனத்துறை அளித்த புகாரின் பேரில், மஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் இருந்த மற்ற கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தனர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த நக்சல்கள் சந்தோஷ், சோமன், விக்ரம் கவுடா, மணிவாசகம் ஆகிய, 4 பேர் வனப்பகுதிக்குள் புகுந்து கேமராவை திருடி சேதப்படுத்தி சென்றது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்காக, கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் இருந்து, சந்தோஷ், சோமன் ஆகிய இரண்டு பேரை போலீசார் அழைத்து வந்து, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், நவ., 6ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். பின்னர் அவர்கள் மீண்டும் கேரள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக, கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, நக்சல் சோமன், 'இயற்கை மீது முதல்வர் ஸ்டாலினுக்கு சரியான நிலைப்பாடு இல்லை; பாசிசம் குறித்து பேச ஸ்டாலினுக்கு அவகாசம் இல்லை,' என, கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விக்ரம் கவுடா, மணிவாசகம் ஆகிய இரண்டு பேர் ஏற்கனவே என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை