உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுமுகை அருகே அனுமதியின்றி மண் கடத்தல்! பொக்லைன் பறிமுதல்; போலீசில் புகார்

சிறுமுகை அருகே அனுமதியின்றி மண் கடத்தல்! பொக்லைன் பறிமுதல்; போலீசில் புகார்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே அனுமதியின்றி மண் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட, சிறுமுகை அருகே இரும்பறை கிராமம் உள்ளது. இங்குள்ள மலைகள் மற்றும் காடுகளை, வனத்துறையினர், சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், மரங்கள் நட தேர்வு செய்துள்ளனர். மலை மீதும், மலையின் அருகேயும் தனியார் விவசாய பட்டா நிலங்கள் உள்ளன. தேன்கல் கரடு அருகே பட்டா நிலங்களில் உள்ள மண்ணை பொக்லைனில் வெட்டி எடுத்து, அதை கிராவல் மண் என, லாரிகளில் கடத்தி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஐந்து அடி உயரத்திற்கு பட்டா நிலத்தில் இருந்த மண்ணை, பொக்லைனில் வெட்டி எடுத்ததற்கான அடையாளங்கள் உள்ளன. அந்த நிலத்தை சீர் செய்வதற்கான அடையாளங்களும் ஏதும் இல்லை. அதனால் லாரிகளில் மண்ணை கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

வனத்துறையினருக்கு தகவல்

நேற்று முன்தினம் இரவு மீண்டும் அப்பகுதியில், மண்ணை வெட்டி எடுக்கும் பணிகளில் இரண்டு பொக்லைன் ஈடுபட்டுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் மனோஜ் இரவு, 11:45 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.பின்பு மண் வெட்டி எடுப்பதை நிறுத்தும்படி கூறினார். இந்த இடம் யாருடையது என தெரியும் வரை, மண் எடுக்க வேண்டாம் என, வனச்சரக அலுவலர் கூறி, இரவு முழுவதும் அங்கு வனப் பணியாளர்களை காவலுக்கு வைத்தார். அப்போது அங்கு இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், 4 டிப்பர் லாரிகள் இருந்தன.

அடையாளம்

நேற்று காலையில் சிறுமுகை வனத்துறையினர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அது பட்டா நிலம் என தெரியவந்தது. உடனடியாக வனத்துறையினர் மேட்டுப்பாளையம் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இருந்த போதும் ஏற்கனவே பட்டா நிலத்தில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண்ணை வெட்டி எடுத்து, லாரிகளில் கடத்தியதற்கான அடையாளம் இருந்தது. இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில், 'இரும்பறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தேன்கல் கரடு அருகே இரவில் லாரிகளில் மண் எடுப்பதாக தகவல் தெரிவித்தனர். இடத்தை நேரில் ஆய்வு செய்தபோது, இது வனத்துறைக்கு உட்பட்டது அல்ல என தெரிய வந்தது. உடனடியாக வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தோம்' என்றார்.

அனுமதி பெறவில்லை

இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் கூறியதாவது: இரும்பறை பகுதியில் மண் கடத்துவதாக சிறுமுகை வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். ஜமாபந்தி பணிகள் நடைபெற்றதால், உடனடியாக சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜமாபந்தி பணிகள் முடிந்த பின்பு, மதியம் இடத்தை ஆய்வு செய்தபோது, மண் எடுத்ததற்கான அடையாளங்கள் இருந்தன. ஆனால் அதற்கான எந்த அனுமதியும், சம்பந்தப்பட்ட விவசாயி அலுவலகத்தில் பெறவில்லை. மேலும் மண்ணை வெட்டி எடுக்க பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளனர். ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, நிலத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிறுமுகை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் மண் கடத்தல் நடைபெறுகிறதா என, இரவில் ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு தாசில்தார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை