ரேலியா அணையின் நீர்மட்டம் உயர்வு
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும், 43.6 அடி உயரமுள்ள ரேலியா அணையில் இருந்து நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அணையின் நீர்மட்டம் குறைந்து 10 அடி உயரத்தில், சேறு, சகதியுடன் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால், நகராட்சி சார்பில் பொக்லைன் பயன்படுத்தி தூர் வாரும் பணி துவங்கியது. இந்நிலையில், கடந்த 18ல் இருந்து கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 35.5 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மழை நீடித்தால் அணை முழு கொள்ளளவு எட்டி உபரி நீர் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.