வாகனம் மோதி சேதமடைந்த சிக்னலை சீரமைக்கணும்
கூடலுார்: கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, உள்ள அரசு பள்ளி, அம்மா உணவகம், சுகாதார மையம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்புக்கு, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இதனால், இப்பகுதியை வாகனங்கள் மிதமான வேகத்தில் கடந்து செல்லும் வகையில், போக்குவரத்து போலீசார் சிக்னல் அமைத்துள்ளனர். இந்த சிக்னல் அருகே, சாலை சேதமடைந்துள்ளது. இப்பகுதியை கனரக வாகனங்கள், கடந்து செல்லும் போது, லாரியின் மேற்பகுதி மோதி சிக்னல் சேதமடைந்து வருகிறது. இதனை, போக்குவரத்து போலீசார் பலமுறை சீரமைத்தனர். எனினும், அடிக்கடி சிக்னல் சேதமடைந்து வருகிறது. இதனால், இணைப்பு சாலையில் இருந்து, வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள சாலை மற்றும் சிக்னலையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துள்ளனர்.