ட்ரோன் கேமரா உதவியுடன் காட்டு யானை கண்காணிப்பு
கூடலுார்: கூடலுார் போஸ்பாரா பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை, வன ஊழியர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கூடலூர், ஸ்ரீமதுரை அருகே, முதுமலையை ஒட்டி அமைந்துள்ளது போஸ்பாரா குடியிருப்பு பகுதி. இங்கு, இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக, காட்டு யானை இப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டினாலும், ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. மக்கள் இரவில் அவசர தேவைக்கு கூட வெளியில் வர முடியாமல் அச்ச மடைந்துள்ளனர். இப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களிலும் பயன்படுத்தும் வசதியுடன் கூடிய நைட் விஷன் தெர்மல் ட்ரோன் கேமரா பயன்படுத்தி யானையை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானை நடமாட்டம் குறித்து தெரியவந்தால், பொதுமக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானையை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.