பாஸ்டியர் நிறுவனத்தில் முத்தடுப்பூசி மருந்து தயாரிப்பு.. துவக்கப்படுமா...? ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் சோதனை பணிகள்
குன்னுார்: குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில், 133.2 கோடி ரூபாயில் திட்ட பணிகள் நிறைவு பெற்றும், 7 ஆண்டுகளாக சோதனை பணி நடந்து வருவதால், முத்தடுப்பூசி மருந்து தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.குன்னுார் பாஸ்டியர் நிறுவனம், 1907ல் துவங்கி, ரேபிஸ் நோய்க்கான மருந்து தயாரிக்கப்பட்டது. பல்வேறு சிக்கலால் இந்த மருந்து தயாரிப்பு, கடந்த, 2007ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசின் நடவடிக்கையால், இங்கு வெறிநாய் கடிக்கான 'ஆன்டி ரேபிஸ்' மருந்து மற்றும் கக்குவான், தொண்டை அடைப்பு, ரண ஜன்னி ஆகியவற்றிற்கான முத்தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. ரூ. 133.2 கோடியில் திட்டம்
இந்நிலையில், உலக சுகாதார மையத்தின் தரத்தில் மருந்துகள் உற்பத்தி செய்ய வேண்டும்,' என்ற உத்தரவால், இதன் உற்பத்தி, 2007ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசால் 133.2 கோடி ரூபாய் மதிப்பில், இங்கு, 16 ஏக்கர் பரப்பில், முத்தடுப்பூசி ஆய்வகங்களுக்கான கட்டமைப்பு பணிகள் கடந்த, 2013ல் நிறைவு பெற்றது.இங்கு உலகளாவிய தடுப்பு மருந்து திட்டத்தின் கீழ், வழங்க, 'பென்ட வேலன்ட் வேக்சின், டி.பி.டி., ஹெபடைடிஸ், ஹெபடைடஸ்-பி' ஆகிய, 5 மருந்துகளின் உற்பத்திக்காக, மத்திய அரசின் குடும்ப நலத்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின், ஆய்வகங்களில், இத்தாலி நாட்டின் 'பில்லிங் லைன்' இயந்திரம் உட்பட நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டது. மேலும், 'தர மேம்பாடு மற்றும் நுண் திட்ட பணிகள்; 4 உற்பத்தி ஆய்வகங்களில் உட்புற தட்ப வெப்ப நிலை சரி செய்தல்,' உள்ளிட்ட பல பணிகள் கடந்த, 2018ல் நிறைவு பெற்றது. இதை தொடர்நது, 'கடந்த, 2019ம் ஆண்டில் முதல் உற்பத்தி துவங்கும்,' என தெரிவித்த நிலையில், கொரோனா பாதிப்பின் போது, நீலகிரி மாவட்டத்திற்காக, இங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியதால், பரிசோதனை நடந்தது. அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை துவங்கியதால் இதனை காரணம் காட்டி, அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகளாக சோதனை
அதே சமயம், ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து தயாரிக்க கோவை பிரஸ் காலனி பகுதியில், 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தடுப்பு சுவருடன் பணி கிடப்பில் போடப்பட்டது. 2023ல் ஒரு கோடி டோஸ் முத்தடுப்பூசி மருந்து வினியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதன் பிறகு, 3 கட்டமாகஇங்கு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில், ஓராண்டுக்கு முன்பு, 100 பேர், கடந்த மாதம் 50 பேர் என புதிதாக ஆட்களும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, அங்கு அதிகாரிகள், அலுவலர்கள், பாதுகாவலர்கள், ஒப்பந்த பணியாளர் என, 350 பேர் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில்,'முத்தடுப்பூசி, டிப்தீரியா - டெட்டனஸ் மற்றும் டெட்டனஸ்' ஆகிய, மருந்துகள் தயாரிப்பதற்கான சோதனை பணிகள், 7 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆனால், மருந்து தயாரிப்பு துவக்கப்படாமல் உள்ள பல்வேறுகேள்வியை எழுப்பி வருகிறது.
அடுத்த ஆண்டில் தயாராகும்...
இது தொடர்பாக, நிறுவன இயக்குநர் டாக்டர் சிவக்குமார் கூறுகையில், கோவிட் பாதிப்பு காரணமாக கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது சோதனை பணிகள் நடந்து வருவது நீண்ட செயல்முறை திட்டமாகும். ஒவ்வொரு சோதனையிலும் ஆய்விற்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் மருந்து உற்பத்தி செய்து வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோவையில் ரேபிஸ் மருந்து தயாரிப்பு திட்டத்திற்கு தடுப்பு சுவர் பணிகள் முடிந்துள்ளது. மற்ற பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கான நிதி வந்த பிறகு அடுத்த கட்ட பணிகள் துவங்கும், என்றார்.