உண்ணி செடிகள் அகற்றும் பணி தீவிரம் :பழ மரங்கள் நடவு செய்ய திட்டம்
கூடலூர்: கூடலூர் வன கோட்டத்தில், 980 ஏக்கரில், பயனற்ற உண்ணிச் செடிகளை அகற்றும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், 'லன்டானா கமாரா' எனும் உண்ணிச்செடிகள் மற்றும் பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவை எந்த பயனும் தராத களைச்செடிகள். இவற்றின் அபரிமித பெருக்கத்தால், வனவிலங்குகள் விரும்பி உண்ணக் கூடிய இதர தாவரங்கள், வளர முடியாத நிலை உள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழலும் உள்ளது. இதனால், வனத்துறையினர் களைச்செடிகளை அகற்றி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவுபடி, உண்ணி செடிகள் வேரோடு அகற்றும் பணி நடந்து வருகிறது. பணியை ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். முதுமலையைத் தொடர்ந்து, ஐகோர்ட் உத்தரவுபடி கூடலூர் வனப்பகுதியிலும் உண்ணிச் செடிகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இவற்றை அகற்றிய பகுதிகளில், வனவிலங்குகள் விரும்பி உண்ணக்கூடிய புற்கள், மூங்கில்கள் மற்றும் பழ மரங்கள் நடவு செய்து வருகின்றனர். இவை முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதன் வாயிலாக, வன விலங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 864 ஏக்கர் அகற்றம் கூடலூர் வனப்பகுதியில், 1,850 ஏக்கர் பரப்பளவில் உண்ணிச் செடிகள் இருப்பது சர்வே வாயிலாக தெரியவந்துள்ளது. இதில், முதல் கட்டமாக கடந்தாண்டு, 864 ஏக்கர் பரப்பளவில் உண்ணி செடிகள் அகற்றப்பட்டன. நடப்பாண்டு, 980 ஏக்கர் பரப்பளவில் செடிகள் அகற்றும்பணி நடந்து வருகிறது. - வெங்கடேஷ் பிரபு, மாவட்ட வன அலுவலர், கூடலுார்.