ரூ.50 லட்சம் மோசடி இரு சகோதரர்கள் கைது
பெரம்பலுார்:நிலம் விற்பதாக கூறி முதியவரிடம், 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார், கம்பன் நகரை சேர்ந்தவர்கள் சின்னதம்பி, 62, குணசேகரன், 60. சகோதரர்களான இருவரும் சேர்ந்து, தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்யப்போவதாக சிலரிடம் கூறினர்.ரெங்கா நகரை சேர்ந்த ரெங்கராஜ், 65, நிலத்தை வாங்கிக்கொள்ள, முன்பணமாக, 50 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்தார். இருவரும் கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்தனர்.நிலத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை. பணத்தையும் தரவில்லை. ரெங்கராஜ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அவர்கள், ரெங்கராஜை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.ரெங்கராஜ், பெரம்பலுார் எஸ்.பி., ஆதர்ஸ்பசேராவிடம் புகார் கொடுத்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சின்னதம்பி, குணசேகரன் மீது வழக்கு பதிந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.