| ADDED : செப் 13, 2011 12:40 AM
புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை
கட்டிடம் கட்ட எம்.பி., நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என
எம்.பி., குமார் உறுதியளித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்
கல்லூரியில் மாணவிகள் பேரவை துவக்கவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் பவானி
தலைமை வகித்தார். பேராசிரியை கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி வரவேற்றார்.
பேரவையை துவக்கி வைத்து திருச்சி தொகுதி அ.தி.மு.க., எம்.பி., குமார்
பேசியதாவது: அரசு கல்லூரிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச்
சேர்ந்த மாணவர்களே அதிகம்பேர் படிக்கின்றனர். வசதி படைத்தவர்கள்
பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதையே கவுரவமாக
கருதுகின்றனர். இதற்கு கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தான்
காரணம். அரசு கல்லூரிகளில் வகுப்பறை, ஆய்வகம், நூலகம் போன்ற உள்கட்டமைப்பு
வசதி குறைவு. இவற்றை அதிகரித்து தனியார் கல்லூரிகளுக்கு இணையாக அரசு
கல்லூரிகளும் இயங்கவேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிக கவனம்
செலுத்திவருகிறார். ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் அரசு கல்லூரிகள்
அனைத்தும் தனியார் கல்லூரிகளைப் போன்று உள்கட்டமைப்பு வசதிகளுடன் தரம்
உயர்த்தப்படும். புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் போதிய
வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி
வருவதாக கல்லூரி நிர்வாகம் சுட்டிக்காட்டியது. இந்த நிலை மாறவேண்டும்
என்பதற்காக புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட எம்.பி., நிதியிலிருந்து 25
லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். இக்கல்லூரியில் படிக்கும்
மாணவியர் அனைவரும் நல்லமுறையில் படித்து உயர் பதவிகளுக்கு வரவேண்டும்.
விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
இதற்காக மாணவியர் ஒவ்வொருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ரோல் மாடலாக
பின்பற்றவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கல்லூரி
பேராசிரியைகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
பேரவைத் தலைவி பர்ஜானா பேகம் நன்றி கூறினார்.