உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / எஸ்.டி., சான்றிதழ் வழங்க தாசில்தார் மறுப்பு?

எஸ்.டி., சான்றிதழ் வழங்க தாசில்தார் மறுப்பு?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்குடியினருக்கான எஸ்.டி., சான்றிதழ் வழங்க தாசில்தார்கள் மறுத்துவருவதாக மாவட்டக் கலெக்டரிடம் நரிக்குறவர் இன மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் மற்றும் திருமயம் தாலுகா பகுதிகளில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் ஆண்டாண்டு காலமாக வசிக்கின்றனர். வேட்டையாடுதல் இவர்களது குலத்தொழிலாக இருந்தாலும் இதில் போதிய வருமானம் கிடைக்காததால் ஈஞ்சிக்கூடை மற்றும் பாய் முடைதல், துடைப்பம் தயார் செய்தல், பாசிமாலைகள் தயார்செய்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடோடிகளாக அலைந்து திரிந்து பிழைப்பு நடத்திவந்த இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அறிவொளி இயக்கம் துவக்கப்பட்டது முதல் இவர்களது குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். இதன்காரணமாக நரிக்குறவர் இன மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு வருகிறது.இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசியல் கட்சியினர் பரிந்துரையின் பேரில் இவர்களில் ஒருசிலருக்கு இந்து குறவன் என்பதற்கான எஸ்.சி., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவர்களது வாழ்க்கை முறையை அலசி ஆராய்ந்த தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் (டி.என்.எஸ்.டி.ஆர்.சி.,) புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்துவரும் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால் இவர்களுக்கு எஸ்.டி., சான்றிதழ் வழங்குமாறு அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. இதனடிப்படையில் தங்களுக்கு பழங்குடியினர் (எஸ்.டி.,) என்பதற்கான ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.வனப்பகுதிகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள காட்டுவாசி இனத்தவர்கள் மட்டுமே எஸ்.டி., சான்றிதழ் பெற தகுதியுடையவர் என்பதால் நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்துவருகின்றனர்.இதன்காரணமாக தங்கள் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வைக்கவும், அரசிடமிருந்து நலத்திட்ட உதவிகள் பெறவும் முடியாமல் அம்மாவட்ட நரிக்குறவர் இன மக்கள் பரிதவித்து வருகின்றனர். வனப்பகுதிகளையே வாழ்வாதாரமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் தான் இதரப்பகுதிகளுக்கு குடிபெயர நேர்ந்ததாக கூறும் நரிக்குறவர் இன மக்கள், தங்களுக்கு இதர மாவட்டங்களில் வழங்குவது போன்று ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் பழங்குடியினர் (எஸ்.டி.,) சான்றிதழ் வழங்கவேண்டும் எனக்கோரி நேற்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மகேஸ்வரி உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ