| ADDED : மே 30, 2024 01:51 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், குழந்தைகள் ஆறு லட்சம் பேர் உள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு போன்ற அமைப்புகளில் குறைந்த அளவு பணியாளர்களே உள்ளனர். இதனால் குழந்தைகள், பெண்கள் உரிமைகளை பாதுகாக்க, 1,000 தன்னார்வலர்களை உருவாக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினார்.அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் முயற்சி மேற்கொண்டார். அவர் கூறியதாவது: முதற்கட்டமாக ஏழு கல்லுாரிகளில் பயிலும் மாணவியர் 210 பேருக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொண்டு நிறுவனங்களின் மூலம், 240 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஜூலை மாதத்தில் கலைக் கல்லுாரிகளில் பயிலும் மாணவியரை தேர்வு செய்து கிராமம்தோறும் அவர்கள் இருக்கும் வகையில் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்கள் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்களை குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தருவர்.அதன்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இங்கு தான் முதன் முறையாக அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.