பரமக்குடி பெருமாள் கோயிலில் உலக நன்மைக்கு கிருஷ்ண யாகம் 3 நாட்கள் கோலாகலம்
பரமக்குடி: பரமக்குடியில் வேதாத்யயன சபையின் 80வது ஆண்டு விழா மற்றும் உலக நன்மைக்காக நடத்தப்படும் கிருஷ்ண யாகம் 70 வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ண யாகம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி ஆக.26 மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுக்கப்பட்டு நகர் வலம் வந்து பெருமாள் கோயிலை அடைந்தது. பின்னர் முதல் கால யாக பூஜைகள் துவங்கி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள், மகாபூர்ணாகுதி நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் 1944ல் துவக்கப்பட்ட வேதாத்யயன சபையின் 80வது ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு ஹோமங்கள், சொற்பொழிவு நடந்தன. ஏற்பாடுகளை வேதாத்யயன சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.