| ADDED : ஜூலை 25, 2024 02:18 AM
ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள், மஞ்சள், இஞ்சியை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடத்தல்காரரை போலீசார் தேடுகின்றனர்.மண்டபம் வடக்கு கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினமான 130 கிலோ கடல் அட்டைகள் வேக வைத்த நிலையில் இருந்தது. மேலும் 10 மூடையில் 400 கிலோ மஞ்சள், 13 மூடையில் 650 கிலோ இஞ்சி இருந்தது. இதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம். இதனை பறிமுதல் செய்த இந்திய வீரர்கள் கடல் அட்டையை வனத்துறையினரிடமும், இஞ்சி, மஞ்சளை சுங்கத்துறையினரிடமும் ஒப்படைத்தனர். இவற்றை மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த கடாபி 55, என்பவர் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. தப்பியோடிய இவரை மத்திய, மாநில உளவுத்துறையினர் தேடி வருகின்றனர்.