| ADDED : ஜூலை 26, 2024 11:50 PM
ராமநாதபுரம்:துாத்துக்குடி கடல் பகுதியில் மே 19ல் இந்திய கடலோர காவல்படையினர் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது, எல்லை தாண்டி வந்து இந்திய பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த படகை பறிமுதல் செய்து, அதிலிருந்த மீனவர்கள் ஏழு பேரை காவல் படையினர் கைது செய்தனர். கைதான, இலங்கை காலே மாவட்டம் அம்பலன்கோடா பகுதியைச் சேர்ந்த ராமுது இண்டிகா திலிப்குமார, 42, போக்லே பியால் டி சில்வா, 44, கழுத்தோடக நிரங்க லக்மால், 27, கபுகே கியாங்கே தாரக அமிலகுமார, 40, சுசாந்தா, 39, ராம்புத்ரா சமிந்தா புஷ்ப குமார, 37, மாலியா வடு சுபாலி, 57, ஆகிய ஏழு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.நேற்று மத்திய அரசு ஏழு இலங்கை மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டது. இதன்படி, துாத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏழு மீனவர்களை விடுவிக்க பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று, நீதிபதி மோகன்ராம் ஏழு இலங்கை மீனவர்களை விடுவித்து உத்தரவிட்டார். விரைவில் ஏழு மீனவர்களும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.