| ADDED : ஜூன் 14, 2024 04:34 AM
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நுாதன ஆண்டாள் திருத்தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.இதன்படி ஆண்டாள் ஆடிப்பூர தேர் திருவிழா குழு சார்பில் நுாதன தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கியது. அப்போது அனுக்ஞை, கும்ப பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.பின்னர் கடம் புறப்பாடாகி சுவாமி தேரில் எழுந்தருளியதும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் தேரை ரத வீதிகளில் வடம் பிடித்து இழுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி பூரத்தன்று ஆண்டாள், வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடக்கிறது.தேரானது இரண்டு குதிரைகள் பூட்டிய நிலையில் அழகிய விமானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், விழாக் குழுவினர் கலந்து கொண்டனர்.