| ADDED : ஜூலை 18, 2024 09:58 PM
நயினார்கோவில்: பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடி பட்டத்தில் மழையை எதிர்நோக்கி 5, 9 கலப்பை டிராக்டரில் உழவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆடி மாதத்தில் துவங்கும். இதன்படி ஆடி பட்டம் தேடி விதை என முன்னோர் கணித்துள்ளனர்.இந்நிலையில் நயினார்கோவில் உட்பட பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் டிராக்டரில் விவசாய நிலங்களில் உழவுப் பணிகளை மேற் கொண்டுள்ளனர். முதலில் 5 கலப்பை மூலம் உழவு மேற்கொண்டு பின்னர் 9 கலப்பைகளில் உழவு செய்கின்றனர். இதற்காக மணிக்கு ரூ.900 முதல் 1200 வரை செலவிடுகின்றனர். இந்த ஆண்டு சித்திரை மாதம் முதல் ஆனி வரை கடுமையான வெயில் வாட்டினாலும் அவ்வப்போது கோடை மழையும் பெய்தது.இதையடுத்து பருத்தி சாகுபடி செய்தவர்கள் சில பகுதிகளில் நல்ல பலன் அடைந்தனர். ஆடி மாதத்தில் விதைப்பதற்கு தகுந்த பருவநிலை இருக்கும். ஆடி பட்டம் தேடி விதை என ஆடி பதினெட்டாம் நாளில் விதைக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.அதிக மழை பெய்தால் நெல், சிறுதானியங்கள், காய்கறி பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.நல்ல மகசூல் கிடைக்க, தரமான விதை, நேர்த்தியான உரங்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளின் படி விவசாயிகள் செயல்பட வேண்டும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.