| ADDED : ஜூலை 27, 2024 05:05 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு 2 மாதங்களாக பாமாயில் வழங்கவில்லை. இதனால் இன்று போய் நாளை வா என்ற கதையாக இன்னுக்கு வரல நாளை வந்து விடும் என விற்பனையாளர்கள் கூறுவதால் பலமுறை அலையும் கார்டுதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 186 ரேஷன் கார்டுகளில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 738 அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் இறுதிவரை வழங்கப்படுகிறது. குறிப்பாக கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் விற்கப்படுகின்றன. இவற்றை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதில் தொடரும் குளறுபடி காரணமாக கடந்த மே மாதம் முதல் பருப்பு, பாமாயில் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து கார்டுதாரர்களுக்கும் அவற்றை விநியோகம் செய்ய முடியவில்லை. எனவே ஜூன் முதல் பருப்பு வழங்கப்படவில்லை. ஆனால் பாமாயில் வாங்காதவர்கள், இம்மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அரசு அனுமதித்தது. அதற்கு ஏற்ப முழு அளவில் பொருட்கள் அனுப்பப்படவில்லை. இதனால் பாமாயில் வாங்க மட்டும் கார்டுதாரர்கள் ரேஷன் கடைக்கு பலமுறை அலைகின்றனர். அவர்களுக்கு உரிய பதிலளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர். மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோவன் கூறுகையில், பாமாயில் மே மாதத்திற்கு முன் டெண்டர் மாற்றப்பட்டு கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வந்தவுடன் மொத்தமாக வழங்கலாம். ராமநாதபுரம் மட்டுமில்லை. மாநில அளவில் இப்பிரச்னை உள்ளது. விரைவில் சரியாகிவிடும் என்றார்.--